×

தாய்மொழிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள் : மு.க.ஸ்டாலின் பேச்சு

சிவகாசி: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள் என சிவகாசியில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.மதுரை மாநகர் திமுக பொறுப்புக்குழு தலைவர் தளபதியின் மகன் அன்பு - தன்யா (எ) தனலட்சுமி ஆகியோரின் திருமணம், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: நமது இயக்கத்தில் தளபதி குடும்பம் திமுகவிற்கு உழைத்தது. எந்த உணர்வோடு, எந்த கொள்கையில் திராவிட இயக்கம்,  திமுக இயங்குகிறதோ அதன்படி நடக்க வேண்டும். குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். தாய்மொழி தமிழுக்கு ஆபத்து ஏற்படுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப்பெயர்களை சூட்ட வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அளவோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அதிகமாக செலவு செய்து வருகின்றன.

முன்பு எல்லாம் நாம் இருவர் நமக்கு மூவர் என்று கூறினோம். அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்றனர். நாளைக்கு நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்ற நிலைகூட வரலாம். நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்று கூறினாலும் ஆச்சரியம் இல்லை. நாட்டில் பொருளாதார சூழ்நிலை மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்று மணமக்களுக்கு தெரியும். அதை மனதில் வைத்துக்கொண்டு மணமக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும். வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். பாரதிதாசன் கூறியதை போல வீட்டிற்கு விளக்காகவும், நாட்டிற்கு தொண்டர்களாகவும் பணியாற்றிட வேண்டும்.

Tags : children ,MK Stalin , Tamil language , children threatening mother tongue, MK Stalin's speech
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்