உவரியில் ஒதுங்கிய திமிங்கலம் கடற்கரையில் புதைப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் உவரி கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பெரிய அளவிலான திமிங்கலம் இறந்த நிலையில் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாவட்ட வன அலுவர் திருமால் மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று இறந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.

சுமார் 10 டன் எடையிருந்த இந்த திமிங்கலம் கடலில் பெரிய கப்பல் மோதி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் பின்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த திமிங்கலம் 12 மீட்டர் (சுமார் 40 அடி) நீளம் உடையதாக இருந்தது. இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கும் என தெரிகிறது. இதன் வயது 12 முதல் 15க்குள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இறந்த திமிங்கலத்தின் உடலிலிருந்து சில பாகங்களை மட்டும் பகுப்பாய்விற்காக எடுத்துக்கொண்டு அங்கேயே உடற் கூறாய்வு செய்து கடற்கரையில் புதைத்தனர்.

Related Stories: