சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களிலும் 7வது ஊதிய உயர்வை அமல்படுத்த மறுத்து விட்டதாக கோயில் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் அர்ச்சகர் இளநிலை உதவியாளர், எழுத்தர், மேலாளர், அர்ச்சனை சீட்டு வழங்குபவர்கள், துப்பரவு பணியாளர், காவலர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களை போன்று 7வது ஊதியக்குழுப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையேற்று 7வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டார். மேலும், இந்த திருத்திய ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கான பணப்பயன் கடந்த 2017 அக்டோபர் 1ம் தேதி வழங்கப்படுகிறது என்றும், திருத்திய வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஊர்திப்படி கடந்த ஜூலை 1ம் தேதி வழங்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.