பாகிஸ்தானில் உச்சத்தைத் தொட்ட நிதி நெருக்கடி : `ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113; பால் ரூ.140 க்கு விற்பனை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தையும், அனல் காற்றையும் பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. இதனால் அங்கு விளை பொருட்கள் உற்பத்தி குறைந்த நிலையில், இம்ரான் கான் அரசின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.

இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை  நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்தது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய  விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர்.பாகிஸ்தானில் ஏறக்குறைய 100  தயாரிப்புகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவுடான வணிக உறவை முறித்துக்கொண்ட பாகிஸ்தானுக்கு பெரும்பாலான அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.  பாகிஸ்தானின் காய்கறி சந்தையிலும் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில், மொகரம் பண்டிகை நாட்களில் பாலின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, அந்தச் சமயங்களில் பால், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டின் மொகரம் பண்டிகை நேற்று பாகிஸ்தான் முழுவதும் கொண்டாடப்பட்டது.ஆனால், அங்கு ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலின் விலை அதைவிட அதிகரித்துள்ளது,

அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிபர் மாளிகைக்கு மின்கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து இருப்பதால், நடுத்தர, ஏழை எளிய மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.பாகிஸ்தானின் மிகவும் சரிவடைந்த பொருளாதார நிலையை இந்தப் பால் விலை காட்டுவதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, ஆலோசனை வழங்க, தங்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாக சமீபத்தில் பன்னாட்டு நிதியம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories: