பெங்களூரூ: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில்(கே.ஆர்.எஸ்) மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 41,000 கன அடி வீதமும், கபினி அணைக்கு நொடிக்கு 17,000 கன அடி வீதமும் நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. எனவே, காலை 9 மணி நிலவரப்படி, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 38,600 கன அடி வீதமும், கபினியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக வினாடிக்கு 53,600 கன அடி வீதம் காவிரியில் நீர் பாய்கிறது.