×

இன்று அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்

நியூயார்க்: பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை உலகம் உணர்ந்தது. நியூயார்க்கில் கம்பீரமாக இருந்த இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டன. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர்11-ம் தேதி காலை 8:46 மணிக்கு அல்-குவைதா பயங்கரவாதிகள் 19 பேர் அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர். பின்னர் முதலிரண்டு விமானங்களை தாழ்வாக பறக்க வைத்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்தனர்.

மோதிய ஒரு மணி 42 நிமிடத்துக்குள் தலா 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அருகிலிருந்த 10 கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகின.இதில் இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியானார்கள். மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்துள்ளனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் இறந்தனர்.

நான்காவது விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளுக்கும், அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கும் சண்டை நடந்துள்ளது. முடிவில் இதுவும் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தில் 40 பேர் பலியாகினார்கள். இச்சம்பவத்தால்அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்து போனது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பை ஒழித்துக்கட்ட பயங்கரவாதிகள் மீது போர் என்ற நடவடிக்கையை அமெரிக்கா துவக்கம் செய்தது. தளராத நம்பிக்கையுடன் இந்த ஒற்றை குறிக்கோளில் பெரும் வெற்றியையும் அமெரிக்கா கண்டது. ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா மற்றும் அல்-குவைதா பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் தாக்குதல் தொடுத்து பழிக்குப்பழி வாங்கினார்கள்.

சுமார் 9 ஆண்டுகளாக நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் 2011-ம் ஆண்டு மே 2-ம் தேதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பீனிக்ஸ் பறவைசாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் புதிதாக வர்த்தக மைய கட்டடம் 2014-ம் ஆண்டு  நவம்பர் மாதம் 3-ம் தேதி திறக்கப்பட்டது.இச்சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமாக நேஷனல் செப்டம்பர் 11 மெமோரியல் அண்ட் மியூசியம் பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் நினைவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

Tags : twin tower attack commemoration ,America , Today is America, Twin Towers, Attack, Memorial Day
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...