‘ஏய் நீ...அழகாக இருக்கிறாய்’ பெண்ணை துரத்திய போதை போலீஸ்: கோவையில் பரபரப்பு

அன்னூர்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வன்னியன்கோவில் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை தாண்டி சென்றபோது, போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் அவரை துரத்திக் கொண்டு வந்துள்ளார். இதை கண்டு பயந்துபோன பெண், வாகனத்தை வேகமாக இயக்கினார். அப்போது அவரை வாகனத்தில் வழிமறித்த பிரபாகரன் என்ற அந்த போலீஸ்காரர் ‘‘ ஏய் நீ அழகாக இருக்கிறாய்... உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது...’’ எனக் கூறி ஆபாசமாக பேசியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை பிரபாகரன் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பீதியடைந்த அந்த பெண் அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கும் சென்று அவரிடம் தகாத வார்த்தையில் போலீஸ்காரர் பிரபாகர் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து தன் கணவருக்கு அந்த பெண், செல்போனில் தகவல் தெரிவித்தார். இதன்பின் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கணவர் மற்றும் அவரது நண்பர்கள் அத்திப்பாளையத்துக்கு வந்து போலீஸ்காரர் பிரபாகரனை சுற்றிவளைத்து எச்சரித்தனர். அப்போது போலீஸ்காரர் பிரபாகரன் குடிபோதையில் இருந்துள்ளதும், அவர் வந்த இருசக்கர வாகனத்தில் சாராயத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆவேசமடைந்த பொதுமக்கள், சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என கூறி, அவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசிடம் ஒப்படைத்தனர்.குடிபோதையில் பெண்ணை துரத்தி சென்ற போலீஸ்காரரின் நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: