மருத்துவ கல்லூரியில் சேர போலி ஆணை ஆந்திரா, பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் சிக்கினர்

மதுரை:  மதுரை மருத்துவ கல்லூரியில் சேர போலி ஆணையுடன் வந்த ஆந்திரா, பீகாரை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பன் நறு நிவாஸ். பீகாரை சேர்ந்தவர் நிதி வர்மன். இவர்கள் 2 பேரும் மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்து, மருத்துவப்படிப்பில் சேருவதற்கான ஆணையை கல்லூரி முதல்வர் வனிதாவிடம் வழங்கினர்.  ஆய்வு செய்ததில் இந்த ஆணை போலி எனத்தெரிந்தது. இதுகுறித்து அவர் மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் தல்லாகுளம் போலீசார், 2 பேரிடமும் நடத்திய விசாரணையில், பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதுடெல்லியைச் சேர்ந்த ‘கிராக் யுவர் கேரியர்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி ஒருவர்,  பன் நறு நிவாஸ் மற்றும் நிதி வர்மனிடம் 8 லட்சம்  கொடுத்தால், மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை பெற்றுத்  தருவதாக கூறியுள்ளார். அதன்படி பணத்தை கொடுத்ததும், அந்த டெல்லி நபர் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை போலியாக தயாரித்து, இருவருக்கும் வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். இவர்களும் அதை நம்பி  மதுரைக்கு வந்து  மருத்துவக்கல்லூரியில் வழங்கி சிக்கியுள்ளனர்.

மதுரை தல்லாகுளம் போலீசார், பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல டெல்லி கும்பல் மேலும் பலருக்கு போலி மருத்துவ கல்லூரிக்கான ஆணைகளை தயாரித்து வழங்கி இருப்பதும் தெரிய  வந்துள்ளது.

Related Stories: