சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள், `அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.