பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் சாலையோரம் வீசப்பட்ட தபால்கள்

அவிநாசி: அவிநாசி பேரூராட்சி செல்லாண்டியம்மன் கோயில் வீதியில்  நேற்று ஒரு துணிப்பை ரோட்டோரமாக கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள்  அந்த பையை பிரித்துப் பார்த்தனர். அதில் பல்வேறு வீடுகளுக்கும்,  அலுவலகங்களுக்கும், இடங்களிலும் தேடிச்சென்று விநியோகம் செய்ய வேண்டிய  வங்கிக் காசோலைகள், ஆதார் அட்டை, தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை,  பல்கலைக்கழக சான்றுகள், காப்பீட்டு நிறுவனத் தபால்கள், வங்கிகளின் சேமிப்பு  கணக்குப் புத்தகங்கள், என்று ஏராளமான தபால்களும், முக்கிய ஆவணங்கள்  இருப்பது தெரியவந்தது. இதைக் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

2018ம்  ஆண்டு நவம்பர், டிசம்பர், 2019ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய  மாதங்களில் அவிநாசி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இந்தத் தபால்கள்  விநியோகிக்கப்பட வேண்டியவை என்பது தெரியவந்துள்ளது. இதனால், தபால்கள்  அனைத்தும்  அவிநாசி தலைமை தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக  சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: தெருவில் கிடந்த தபால்களை மீட்டு, தபால்  நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். இவையனைத்தும் முக்கியமான தபால்கள்,  காசோலைகள், ஆதார் அட்டைகள். இவையனைத்தும் உரிய நேரத்தில்  சம்பந்தப்பட்டவருக்கு கிடைக்காமல் ஏராளமானோர் வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளனர். இதை வீசிச் சென்றவரை கண்டுபிடித்து தபால் துறையினர்  விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: