ராமநாதபுரம் அருகே பரபரப்பு துப்பாக்கியுடன் பெண் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே துப்பாக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த வள்ளி (42). கணவனை விட்டு பிரிந்த நிலையில், தனியாக வாழ்ந்து வருகிறார். வீட்டில் தையல் தொழில் செய்து வரும் வள்ளி, இலங்கைக்கு கடத்துவதற்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்துள்ளதாக அக்கம்பக்கத்தினரிடம் பரவலாக பேச்சு எழுந்தது. இவரின் வீட்டிற்கு இரவு நேரங்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்து செல்வதாகவும் பிரப்பன்வலசை கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர், அளித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் நேற்று முன்தினம் இரவு வள்ளி வீட்டை சோதனையிட்ட போது, கைத்துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், வள்ளியை கைது செய்தனர். துப்பாக்கி வந்தது எப்படி, யார் வாங்கி கொடுத்தது, எதற்காக வைத்திருந்தார், இரவு நேரங்களில் வந்த சந்தேக நபர்கள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா வியாபாரி பூமிநாதனை போலீசார் கைது செய்தனர். பூமிநாதனுக்கும், வள்ளிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தொழில் போட்டியை சமாளிக்க பூமிநாதன் துப்பாக்கியை வாங்கி வள்ளி வீட்டில் மறைத்து வைத்திருக்கலாம் எனற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: