மின்கம்பத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம்: மின்திட்டப் பணியை கிடப்பில் போட்டதால் திருவாடானை அருகே பரபரப்பு

திருவாடானை: திருவாடானை அருகே மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால், மின்கம்பத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 2ம் தேதி ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக கிராமமக்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருவாடானையில் இருந்து ஆதியூர் வழியாக மின்கம்பங்கள் நடப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான மின்கம்பங்கள் கண்மாய் பகுதியில் நடப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின் கம்பங்கள் என்பதால் இவை பலமிழந்து காணப்படுகின்றன.

கம்பத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பலத்த காற்று வீசினாலே சாய்ந்து விடுகின்றன. இதை சரி செய்ய முடியாமல் மின் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் திருவெற்றியூர் பகுதியில் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் மின்தடை ஏற்படுவதால், மின்தடையை சரி செய்ய கிராம மக்கள் கலெக்டரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து உதய் மின் திட்டத்தின் கீழ் மாற்றுப்பாதையில் மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பு 30 மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றினர். அதன்பின் இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருவெற்றியூர் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், காட்சிப் பொருளாக இருக்கும் மின்கம்பத்திற்கு மாலை அணிவித்து நேற்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘‘மின்வாரிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். தொடர் மின்தடையால் அவதிப்படுகிறோம். வரும் 2ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும். 9ம் தேதி மதுரை மண்டல மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பாரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

Related Stories: