ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: முன் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக  கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த 21-ம் தேதி இரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர  தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில்  விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் கடந்த 22-ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்ட .ப.சிதம்பரத்திடம்  விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். ப.சிதம்பரத்துக்கு INS மீடியா வழக்கில் உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார். இரு தரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த  நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை நிபந்தனையுடன் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சிதம்பரத்தை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும். ப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்துக்கொள்ளக்கூடாது என நீதிபதி அறிவுறுத்தினர். ப.சிதம்பரத்துக்கு தேவையான  உடைகளை வெளியில் இருந்து எடுத்துவர அனுமதி உண்டு. 48 மணி நேரத்திற்கு ஒரு முறை சிதம்பரத்தை மருத்துவ பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் இன்று காவல் முடிந்து மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார். இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. அத்துடன் ப.சிதம்பரத்தை கைது செய்யவும், சி.பி.ஐ. காவலில் வைக்கவும் தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது. இதேபோல் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை இன்று (26-ந் தேதி) வரை கைது செய்ய தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அந்த மனுவும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: