திருப்பதி தனியார் லாட்ஜில் பயங்கரம்: சென்னை பெண் கழுத்து நெரித்து கொலை

திருமலை:  திருப்பதி பெத்த காப்பு லேஅவுட் பகுதியில் தனியார் லாட்ஜ் ஒன்று உள்ளது. இந்த லாட்ஜில் கடந்த 23ம் தேதி மாலை 4 மணிக்கு முருகன் என்பவர் சிந்தியா என்ற பெண்ணுடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்து அறை எண் 205ல்  வாடகைக்கு எடுத்து தங்கினர்.அறைக்குள் சென்றவர்கள் மீண்டும் வெளியே வரவில்லை. மேலும் அவர்கள் அறை எடுத்த நேரமும் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.  இந்நிலையில் அறையின் கதவு வெளியே பூட்டப்பட்டு இருந்தது. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து ஜன்னல் வழியாக லாட்ஜ் ஊழியர்கள் பார்த்தனர். அப்போது பெண் ஒருவர் சடலமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

 இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ இம்ரான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையை சேர்ந்த சிந்தியா, முருகன் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் சிந்தியாவை கழுத்து நெரித்து கொலை செய்த முருகன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. மேலும் அவர் லாட்ஜில் கொடுத்திருந்த செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: