உன் திருமணத்துக்கு முன் ஒத்திகை பார்ப்போமா? தவறான உறவுக்கு அழைத்த வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய மணப்பெண்: n தோப்புக்கு கூப்பிட்டு விளாசி தள்ளினார்...வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு

நாகர்கோவில்: தென்தாமரைக்குளம் அருகே தவறான உறவுக்கு அழைத்த வாலிபரை, தென்னந்தோப்புக்குள் வர செய்து அடித்து உதைத்த இளம்பெண், அதை வீடியோவும் எடுத்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டார்.நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் (35 வயது), தென்தாமரைக்குளம் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள  ஒரு வீட்டுக்கு வாழை குலை வாங்குவதற்கு வழக்கமாக செல்வார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் (25) ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த இளம்பெண்ணும் இவரிடம் சாதாரண முறையில், பழகி உள்ளார். அந்த  இளம்பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணமும் நடக்க இருக்கிறது.

 இதுகுறித்து அறிந்த அந்த இளைஞர், இளம்பெண்ணை, செல்போனில் தொடர்பு கொண்டு, ‘உன் திருமணத்துக்கு முன் ஒத்திகை பார்ப்போமா? உனக்கு நிறைய விஷயங்கள் சொல்லி தருகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதைகேட்டதும் அந்த  இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். ‘‘நாம், நட்பாகத்தானே பழகினோம். நம்மிடம் இப்படி கேட்டுவிட்டாரே... அவருக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும்’’ என்று எண்ணினார். இதன்பின், அந்த இளைஞரை தனது வீட்டருகே உள்ள தோப்புக்கு வரவழைத்தார். அவரும் பல்வேறு ஆசைகளுடன் தோப்புக்கு சென்றார். அப்போது, அந்த இளம்பெண் கையில் செல்போனுடன் கோபமாக இருப்பதை பார்த்து மிரட்சியுடன் நின்றார்.  ஆனால், அந்த பெண்ணோ, ‘தோப்புக்குள்ளே வா’ என்று அழைத்துள்ளார். உடனே இளைஞர், ‘தோப்புக்குள் யாராவது இருக்கிறார்களா’... என பயந்தபடி கேட்டு நடந்து சென்றார்.

 

பின்னர், செல்போனில் பதிவு செய்தபடி இளைஞரிடம் அடிக்க தொடங்கினார். கையில் கிடைத்த தென்னை மட்டை, சருகு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வீசினார். ஆனால், இளைஞரோ நடந்து சென்றபடி இருந்தார். அவரை, ‘‘நில்லுடா..  நில்லுடா’’... என்றபடி விரட்டினார். சில நொடியில், அவரது  டீ ஷர்ட்டை பிடித்து இழுத்த இளம்பெண், ‘‘என்னை பார்த்தால், உனக்கு எப்படி தெரிகிறது. உன் பொண்டாட்டியை இப்படி எவனாவது, திருமணத்துக்கு முன் ரிகர்சல் பார்த்து  இருந்தால் உனக்கு எப்படி இருக்கும். உன் மகள், அல்லது உன் தங்கையை இப்படி திருமணத்துக்கு முன் ரிகர்சல் பார்க்க அனுப்பி வைப்பியா’’... என கேட்டு தாக்கினார்.  நிலைமையை உணர்ந்த இளைஞர், ‘‘வீடியோ எடுக்காதே.. என்னை அடிக்காதே’’ என்று கெஞ்சி ஓடுகிறார். அப்படியும் விடாமல், ‘‘ரகசியமாக என்னிடம் அடி வாங்குகிறீயா... ஊரை கூட்டி அடி வாங்குகிறீயா.. உன்னை அடிக்காமல் என்  ஆத்திரம் தீராது. பத்து அடியாவது வாங்கிக்கோ’’ என இளம்பெண் கூறு, அந்த இளைஞர் நின்று,

 ‘‘இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நான் செத்து விடுவேன்... ரிக்கார்ட் பன்னாதிங்க’’ என அழுதபடி கெஞ்சுகிறார். அதற்கு அந்த இளம்பெண்,  ‘‘நீ செத்து போ. சாதாரணமாக பழகிய ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்கும் நீ உயிருடன் இருக்க கூடாது. ஒழுங்கு மரியாதையாக இரு. வயசுக்கு வந்த பெண் குழந்தை வைத்துள்ள நீ, ஏன் இப்படி அலைகிறாய்’’ என்று கூறியவாறு மீண்டும்  தாக்குகிறார். இப்படியாக சுமார் 6 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது. இந்த வீடியோ, சமூக வலை தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அந்த இளம்பெண்தான் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீடியோவில்  இளைஞர் முகம்  தெளிவாக தெரிகிறது. நட்புடன் பழகியதை தவறாக புரிந்து கொண்டு ஒத்திகைக்கு அழைத்த இளைஞரை அழைத்து ஒற்றை பெண்ணாக அடித்து வீடியோ எடுத்து வெளியே விட்டதற்கு அப்பகுதியில் பாராட்டு குவிந்தது.

Related Stories: