×

சீருடையுடன் தூக்கில் தொங்கினார் மதுரையில் சிறப்பு எஸ்ஐ தற்கொலை

மதுரை: மதுரையில் சிறப்பு எஸ்ஐ சீருடையுடன் தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஆயுதப்படையில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் நாகராஜ் (47). இவரது மனைவி பாலவசந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது சொந்த ஊர் அலங்காநல்லூர். குழந்தைகளின் படிப்பு வசதிக்காக போலீஸ்  குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.   வழக்கம்போல் இவர் நேற்று காலை வேலைக்கு சென்றார். மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டு விழாவுக்கு சென்று விட்டனர். வேலைக்கு சென்றவர் மீண்டும் பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். சிறிதுநேரம் கழித்து,  மனைவி பாலவசந்தி போன் செய்துள்ளார். நீண்டநேரமாக போனை எடுக்காததால், பக்கத்து வீட்டுக்கு போன் செய்து, தெரிவித்துள்ளார்.

அவர்கள், பூட்டி இருந்த எஸ்ஐ வீட்டு கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நாகராஜ், தனது எஸ்ஐ சீருடையுடன் தூக்கில் பிணமாக  தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து தல்லாகுளம் போலீசார் வந்து, நாகராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சக போலீசார் கூறுகையில், ‘‘குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவ்வப்போது பணிச்சுமையாக உள்ளது. அதிகாரிகள் டார்ச்சர் செய்து வருகிறார்கள் என எங்களிடம் சொல்லி வந்தார். இந்நிலையில் அவர் தூக்கு  போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்’’ என்றனர்.உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘போலீசாருக்கு பணிச்சுமையை குறைப்பதற்காகவும், மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவ்வப்போது சிறப்பு பயிற்சிகள் கொடுத்து வருகிறோம்’’  என்றார். சீருடையுடன் சிறப்பு எஸ்ஐ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Special SI suicide in Madurai hangs in uniform
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...