சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘நாமினல் ரோல்’ தயாரிப்பதால் பெயர், பிறந்த தேதியை சரிபார்க்க வேண்டும்: பெற்றோருக்கு அறிவுறுத்தல்

சென்னை,: மத்திய பள்ளிக் கல்வி வாரிய பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.  சிபிஎஸ்இ பள்ளிகள் நாமினல்ரோல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் போது பெற்றோர் கவனிக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும்  சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் பொதுத் தேர்வு எழுத உள்ள ஒவ்வொரு மாணவர்களின் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னதாக அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை பெற்றோர் கவனமாக படித்துப்  பார்க்க வேண்டும். அதன்படி பூர்த்தி செய்யப்பட்டபிறகு கடைசி நேரத்தில் திருத்தம் செய்ய முடியாது. அப்படியே மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

தேர்வு விண்ணப்பத்தில் பெற்றோர்(தந்தை, தாய்) காப்பாளர் ஆகியோரின் பெயர்கள் முழுமையாக பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும். சுருக்கமாக எழுதக்கூடாது. தேர்வு விண்ணப்ப படிவத்தில் மாணவர்களின் பிறந்தநாள் என்ற இடத்தில்  மாணவரின் பிறப்பு சான்றில் குறிப்பிட்டுள்ள தேதியைத் தான் குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் பள்ளியில் சேர்ந்த போது கொடுத்த தேதியை குறிப்பிட வேண்டும். இவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.  பாடங்களின் குறியீட்டு எண்களை குறிப்பிடும் போது ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இந்த படிவத்தில் குறிப்பிட்டு பாடக் குறியீடுகளுக்கு மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதனால் இந்த  விஷயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாடக் குறியீடுகள் ஹால்டிக்கெட்டில் இடம் பெறும் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக கணக்கு பாடத்தை குறிப்பிடும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 2020 ஆண்டு முதல் கணக்கு பாடங்கள் அடிப்படைக் கணக்கு, ஸ்டாண்டர்டு கணக்கு என இரண்டு கட்டங்களாக நடக்கும். அதனால் கணக்கு பாடத்துக்கான  குறியீட்டை குறிப்பிடும்போது அதிக கவனம் செலுத்த  வேண்டும். தேர்வு விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது பெற்றோர் அல்லது காப்பாளர் கையெழுத்து மிகவும் அவசியம். ஹால்டிக்கெட்டில் இருப்பதைப் போல தேர்வு விண்ணப்ப படிவத்தில் பெற்றோர் அல்லது காப்பாளர் கையெழுத்தை 2019ம் ஆண்டு  முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதனால் பெற்றோர் கையெழுத்து இல்லாத தேர்வு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பத்தாம்  வகுப்பு தேர்வைப்பொருத்த வரையில் அந்த சான்றில் குறிப்பிடப்படும் பிறந்த தேதி மற்றும் பிற விஷயங்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால் அதில் எந்த தவறும் இல்லாமல் தேர்வு விண்ணப்ப படிவம் மட்டும்  அல்லாமல் அது தொடர்பான எல்லா படிவங்களையும் பிழையில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். இது குறித்து பள்ளிகள் அந்தந்த பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Related Stories: