தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் எவை?: கணக்கெடுக்கும் பணி துவங்கியது...பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.  மேலும், உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறையின் கீழ் கொண்டு வரவும்   திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தமிழகத்தில் 39,202 ஏரிகள் உள்ளன. இதில் 14,098 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஏரிகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால்  கரைகள் பலவீனமடைந்தும், மதகுகள் பழுதடைந்தும், நீர்பிடிப்பு பகுதிகள் தூர்ந்து கொள்ளளவை இழந்தும் காணப்படுகிறது.

இந்த ஏரிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் புனரமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது தான் ரூ.1,250 கோடி செலவில் 21,250 சிறுபாசன ஏரிகள் பராமரிப்பு பணிகளை  மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதற்கான பணிகளை ஊரக வளர்ச்சித்துறை தொடங்கியுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புனரமைப்பு பணி நடைபெறாத ஏரிகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக அந்த ஏரிகளின் புனரமைப்பு பணிக்காக நிதியை பெறவும் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட ஏரிகள் மட்டுமே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலத்தடி  நீர் மட்டத்தை பெருக்கவும், பாசன வசதிக்காக கூடுதல் நீரை சேமித்து வைக்கவும் அனைத்து ஏரிகளும் புனரமைக்கப்படுகிறது. வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏரிகளை பொதுப்பணித்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த ஏரிகளில்  புனரமைப்பு பணி மேற்கொள்ள உள்ளது.

தற்போது அதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இருந்து விரைவில் அறிக்கை பெறப்பட்டு மத்திய அரசிடம் நிதி கேட்டு அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

ஒரே ஏரியை கணக்கு காட்டி மோசடி

தமிழகத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் முதல் பாகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டன. தற்போது இரண்டாவது பாகத்தில் ஏற்கனவே புனரமைப்பு பணி மேற்கொண்ட 1,200 ஏரிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல், மத்திய  அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று ஒரே ஏரியை தொடர்ந்து புனரமைத்து பல கோடியை வீணடித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனாலேயே மத்திய அரசு நிதி தர மறுப்பதாகவும் தமிழக பொதுப்பணித்துறை மீது புகார்  எழுந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: