புதுடெல்லி: ‘காஷ்மீரில் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரிய அரசியல் மற்றும் தேச விரோதம்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால், அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள், போராட்டங்களை தடுப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இம்மாநில நிலவரத்தை நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் சென்றது. நகர் விமான நிலையம் சென்ற அவர்களை, அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.