சென்னை: ஜீரோ வேஸ்ட் நடைமுறையை ஊக்கப்படுத்துவதற்காக அண்ணாநகர் டவர் பூங்காவில் நேற்று குப்பை திருவிழா நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை அனைத்தும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. இவற்றில் 384 டன் மக்கும் குப்பை பல்வேறு முறைகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, சென்னை மாநகராட்சி பூங்காக்களில் உருவாகும் குப்பை அந்த இடத்திலேயே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், குப்பையை 100 சதவீதம் தரம் பிரித்து வழங்குதல் மற்றும் அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யும் முறையை (ஜீரோ வேஸ்ட்) ஊக்கப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு குப்பை மறுசுழற்சி செய்வது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குப்பை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகிறது. அதன்படி 6வது குப்பை திருவிழா நேற்று காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைபெற்றது.