திருவொற்றியூர்: மாதவரம் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக வழக்கறிஞர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் போலீசில் புகார் அளித்தார். மேலும் இதனை தெரிந்துகொண்ட எஸ்.ஐ தன்னை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தாகவும் அந்த வாட்ஸ் அப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செம்பியத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோ.தேவராஜன் என்பவர் கொரட்டூர், மாதவரம், புழல், அம்பத்தூர் போன்ற பகுதிகளில் அரசு மதுபான பார்களில் காலை 5 மணி முதல் 11.50 மணி வரை சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அந்த புகாரின் மீது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.