ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காத எண்ணூர் அனல்மின் நிலையத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்: நாளை நடக்கிறது

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையம் பழுது ஏற்பட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு அங்கு பணிபுரிந்த  தொழிலாளர்கள் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1, அலகு 2 ஆகியவற்றுக்கு தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம், கடன் மற்றும் பதவி உயர்வு ஆகியவை எண்ணூர் அனல் மின் நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இருந்து, வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட  தொழிலாளர்கள் சுமார் 47 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி அறிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் 5 மாதம் ஆகியும் இதுவரையில் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தெரிகிறது.

மின்வாரியம் அறிவித்தபடி தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காதது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எண்ணூர் அனல்மின் நிலைய நிர்வாகத்தின் இந்த செயலால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, எண்ணூர் அனல்மின் நிலைய நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து நாளை (27ம் தேதி) மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சங்கத்தின் சிஐடியூ மாநில தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமையில் எண்ணூர் அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: