சென்னை: கோவளத்தில் நடைபெற்ற உலக அளவிலான அலைச்சறுக்கு விளையாட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் இந்திய சர்பிங் பெடரேஷன், கோவளம் சர்பிங் கிளப் ஆகியவை சார்பில் உலக அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 7ம் ஆண்டு தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டிகளில் புதுச்சேரி, விசாகப்பட்டினம், மங்களூர், கோவா ஆகிய பகுதிகளில் இருந்தும் மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும் பிரபல அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டி நடைபெற்றது. இதில் கோவளம், மாமல்லபுரம் பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 20 சிறுவர்களும் பங்கேற்றனர். நேற்று முன்தினம் காலையில் மகளிருக்கும், நேற்று முன்தினம் மாலையில் இளைஞர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றன. வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்காக பிரபல கிரிக்கெட் வீரரும், அலைச்சறுக்கு வீரருமான ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். நேற்று இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ரயில்வே துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.