கொல்கத்தா: ‘‘சமூக இணையதளங்களில் தகவல்களை பகிரும்போது, மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்’’ என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவுரை கூறியுள்ளார். ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடந்தது. இதில் விருதுகள் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:சமூகத்தில் ஏற்படும் மதரீதியிலான வன்முறைகள் மற்றும் பதற்றங்களுக்கு, குறும்புக்கார நபர்கள் சமூக இணையதளங்களில் பரப்பும் வதந்திகள்தான் காரணம் என கண்டறிப்படுகிறது. இது போன்ற கருத்துக்களை மக்கள் சிலர் அப்பாவித்தனமாக பகிர்வதால், அவர்களும் இந்த குறும்புக்கு காரணமாகிவிடுகின்றனர். பத்திரிகை துறை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதில் வெளியாகும் செய்திகள், சரிபார்க்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஆனால் சமூக இணையதளத்தில் இதுபோன்ற நிலை இல்லை. அதனால் சமூக இணையதளங்களில் வெளியாகும் கருத்துக்களை பகிரும்போது, மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்போது செல்போன்கள் மூலமாக தகவல்கள் எளிதாக பரவுகின்றன. இவை பாரபட்சமின்றி இருக்க வேண்டும்.