வத்திராயிருப்பில் சாலை சீரமைப்பு

வத்திராயிருப்பு: தினகரன் செய்தி எதிரொலியாக வத்திராயிருப்பில் குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்கப்பட்டது. கிருஷ்ணன்கோவில்-வத்திராயிருப்பு தேசிய நெடுஞ்சாலையில், வத்திராயிருப்பு பல்கிலிருந்து, ஊருக்குள் நுழையும் இடம் வரை, கடந்த மாதம் 27ம் தேதி புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது. இதற்காக பழைய சாலையை பெயர்த்ததால், சதுரகிரி ஆடி அமாவாசைக்கு வந்த வாகனங்களில் வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். ஆடி அமாவாசை முடிந்த பின்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சாலையில் உள்ள பாலங்களில் சாலை குண்டும் குழியுமாக இருந்தன. மேலும், முத்தாலம்மன் திடல், நாடார் பஜாரில் ஜல்லிக்கட்டுக்காக கம்பு ஊன்றுவதற்காக தோண்டப்பட்ட சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இது குறித்து நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பாலங்களில் இருந்த குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்பட்டது. வத்திராயிருப்பில் பல்கிலிருந்து, அரசு மருத்துவமனை வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. முத்தாலம்மன் திடலில் தார்ச்சாலை அமைத்தாலும், கலையரங்கம் முழுவதுமாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தார்ச்சாலையின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: