டெல்லி : வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாற்றுச் சான்று வழங்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் பருவமழை கடந்த ஜூனில் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
பலத்த மழையால் சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், மண்சரிவும் ஏற்பட்டது. மழை சற்று குறைந்த நிலையில் மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கேரளத்தை பாதித்த பெருவெள்ளத்தில் மக்கள் ரேஷன் கார்டு ஆதார் கார்டு, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்து உள்ளனர்.
மேலும் பலரது வீட்டுப் பாத்திரங்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை, வரி ரசீது கூட வெள்ளத்தில் சென்று விட்டன. சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களைப் பெற பல்வேறு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உள்ளது. சான்றிதழ்களை இழந்த மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்ய கேரள முதல்வருக்கு ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.