மூணாறு: மூணாறில் கனமழை மூலம் தகர்ந்த பெரியவாரை பாலம் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பால பணிகள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் தற்காலிக பாலம் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பலப்படுத்தப்படுகிறது. மூணாறு-உடுமலை சாலையில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் கான்க்ரீட் பாலம் கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக சேதமடைந்தது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் கன்னியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டு முறை சேதம் அடைந்தது. கடந்த ஆகஸ்டில் சேதமடைந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து சிறிய ரக வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.
பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே கனரக வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பாலம் பலப்படுத்தப்படுகிறது. அதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஜியோ டெக்ஸ்டைல்ஸ் எனும் புதிய ஜெர்மன் தொழில்நுட்டத்தில் பாலத்தின் மேல் கயிறு வலை விரித்து அதில் 40 செ.மீ. உயரத்தில் மண் நிரப்பி அதன் மீது கயிறு வலை விரித்து பின்னர் கற்களை கொண்ட கற்களின் துகள்கள் 40 செ.மீ. உயரத்தில் நிரப்பிய பிறகு கயிறு வளையல் மூடப்படுகிறது.
அதன்பிறகு 20 செ.மீ. உயரத்தில் மெட்டல் கற்களை பரப்பி அவை நன்கு இருகிய பிறகு போக்குவரத்து துவங்கும். அதன்படி பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இன்று (ஆக.25) முதல் போக்குவரத்து துவங்கும் என பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிஸ்லி ஜோசப் தெரிவித்தார். தற்போது வரை பெரியவாரையில் இருந்து மறையூர் பகுதிக்குச் செல்ல ஒரு நபருக்கு ரூ.70, ஆட்டோவில் செல்ல ரூ.100ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இன்று பெரியவாரை பாலம் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.