திருச்சியில் ரூ.16 லட்சத்தை சுருட்டிய வங்கி கொள்ளையனை பிடித்து கொடுத்தது எப்படி என ஆட்டோ டிரைவர் முருகய்யா பரபரப்பு தகவலை தெரிவித்தார். இத குறித்து அவர் கூறியதாவது: பிடிபட்ட நபர் (ஸ்டீபன்) ஒரு பெரிய பேக் வைத்திருந்தார். அவர் லாட்ஜ்க்கு போக வேண்டும் என்றார். உடனடியாக நான் ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றேன். அவர் போதையில் இருப்பதை தெரிந்து கொண்டேன். நேராக ஒரு லாட்ஜ்க்கு சென்றேன். அங்கு சிங்கிள்ரூம் புக் செய்தார். நான் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். பணம் அட்வான்ஸ் கொடுப்பதற்கு பேக்கை திறந்தார். அப்போது கட்டு கட்டாக பணம் இருப்பதை பார்த்தேன். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இந்த பணம் தவறான வழியில் வந்தது என்பதை புரிந்து கொண்டு,
இன்னொரு லாட்ஜ்க்கு போகலாம் என அவரை அழைத்துக்கொண்டு நேராக போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ஆட்டோவை விட்டு விட்டேன். அவர் நன்றாக போதையில் சாய்ந்து கிடந்ததால் அவரால் நான் எங்கு போகிறேன் என்பதை முதலில் யூகிக்க முடியவில்லை. போலீஸ் நிலையத்திற்குள்ளேயே ஆட்டோ வந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்து ஓடிவந்து ஆட்டோவை சுற்றி வளைத்தனர். அப்போது இந்த நபர் வைத்திருக்கும் பையில் கத்தை கத்தையாக பணம் உள்ளது என கூறினேன். போலீசார் அந்த நபரை பிடித்து பேக்கை கைப்பற்றினர். பின்னர் நடந்த விசாரணையில் தான் இவர் திருச்சி வங்கியில் கைவரிசை காட்டியவர் என தெரியவந்து உள்ளது. நான் அவரிடம் இருந்த பணத்தை அபகரிக்கவும் நினைக்கவில்லை. ஒரு திருடனை போலீசிடம் ஒப்படைத்து விட்டோம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.