கொடைக்கானலில் கொட்டும் மழையிலும் கூட்டம் குறையவில்லை: விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சாரல் மழை, லேசான குளிர் என இதமான சூழல் நிலவுவதால் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக இதமான காற்றுடன் கூடிய சாரல் மழை அவ்வப்போது பெய்கிறது. ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்கிறது. பகல் பொழுதிலேயே இதமான சூழல், லேசான குளிர் நிலவுவதால், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் நேற்று முன்தினத்தில் இருந்தே அதிகளவில் குவிந்துள்ளனர்.

தூண் பாறை, குணா குகை, கிரின்வேலி வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ், பிரையண்ட் பூங்கா என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் சாரலில் நனைந்தபடியே சுற்றிப் பார்த்தனர். மேலும், ஏரியில் குடை பிடித்தபடி படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது.

இங்கும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து கண்டு ரசித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, வட்டக்கானல் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

Related Stories: