சென்னை: தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காவல் தேர்வு தொடங்கியுள்ளது. 8888 பணியிடங்களுக்கு நடைபெற உள்ள தேர்வில் சுமார் 3.22 லட்சம் பேர் தேர்வு எழுதிகின்றனர். மேலும் சென்னையில் மட்டும் 13 மையங்களில் சுமார் 19,990 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர 62 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 8888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க ஏப்ரல் 8-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
தேர்வுக்கு சுமார் 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மைங்களில் நடக்கிறது. எழுத்து தேர்வில் மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவில் 50 கேள்விகளும், உளவியலில் 30 கேள்விகளும் கேட்கப்படும். வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை, 791 பெண்கள் உட்பட 6718 பேர் எழுதுகின்றனர். அழகப்பா பொறியில் கல்லுாரி, அழகப்பா கலை கல்லூரி உட்பட 8 மையங்களில் நடைபெறும் தேர்விற்காக, மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ஆகியோர் தலைமையில் சுமார் 700- ற்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.