மரப்பெட்டியில் பதுக்கிய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

ராயபுரம்: ராயபுரம் ஜி.எம்.பேட்டையில் துறைமுக ஊழியர்கள் குடியிருப்புக்கு சொந்தமான காலி இடத்தில் நேற்று முன்தினம் சிறுவர்கள் சிலர், நட்சத்திர ஆமைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள், ராயபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ‘‘அதே பகுதியில் இருந்த மரப்பெட்டியில் நட்சத்திர ஆமைகள் இருந்தன. அவற்றை எடுத்து விளையாடினோம்,’’ என தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 42 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து தேனாம்பேட்டை வனசரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நட்சத்திர ஆமைகளை இங்கு மரப்பெட்டியில் வைத்துவிட்டு சென்றது யார்? வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கடந்த 3 மாதத்துக்கு முன், காசிமேடு கடற்கரை பகுதியில் அனாதையாக அட்டை பெட்டியில் கிடந்த நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: