நெல்லை: நெல்லை மாநகரில் ஓரினச்சேர்க்கை பிரியர்களுக்காக தனி மொபைல் ஆப் உருவாக்கி இணைத்து ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது. இந்த கும்பலிடம் முக்கிய பிரமுகர்களும் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.விருப்பத்தின் பேரில் ஓரினச் சேர்க்கை கொள்ளும் நபர்களை தண்டிக்க முடியாது. அது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பு தீர்ப்பு கூறியது. இது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சாதகமாக உள்ளது என பல அமைப்புகள் கருத்து தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் செயலும் அதிகரித்து வருகிறது.
அவர்களை இணைக்க தனி ‘மொபைல் ஆப்’ ஏற்படுத்தி ஒரு கும்பல் பணம் பறித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் ஆப்-ல் முதலில் ஓரினச் சேர்க்கை விருப்பம் உள்ளவர்களை இணைக்கின்றனர். பின்னர் அவர்கள் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக படம் பிடிக்கின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரிடம் வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இறங்குகின்றனர். இதேபோல் நெட்வொர்க் அமைத்துள்ள கும்பலிடம் பேராசிரியர் ஒருவரும் சமீபத்தில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். சமீபத்தில் நெல்லை போலீசாரிடம் சிக்கிய இருவரிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.