வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை அறிய புதிய செயலி: செப்.1ல் தேர்தல் ஆணையம் அறிமுகம்

மதுரை: வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், வரும் செப்.1ம் தேதி புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தாங்களாகவே கண்டறிய, வரும் செப்.1 முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக புதிய செயலியை (Voter Helpline) தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. வாக்காளர்கள் தங்களது செல்போன் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் வாக்காளராக இருக்கிறோமா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். இதற்கான வசதி இல்லாதவர்கள், ஆர்டிஓ, தாசில்தார், மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயரை சரி பார்த்து கொள்ளலாம்.

பெயர் இல்லையென்றால், வாக்காளராக சேர தகுதியுடைய ஆவணங்களை கொடுத்து புதிய வாக்காளராக சேர விண்ணப்பிக்கலாம். 18 வயது முடிந்தும், பட்டியலில் சேரவில்லை என்றால் புதிதாக சேர படிவம்-6 கொடுத்து வாக்காளராக சேர்ந்து கொள்ளலாம். மேலும், செப்டம்பர் மாதம் முழுவதும் இதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தாலுகா அளவில் நடைபெறும் மக்கள் திட்ட முகாமில் வாக்காளர் சேர்ப்பு அலுவலர், தாசில்தார், துணை தாசில்தார் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் ஆகியோர் முகாம் நடைபெறும் கிராமத்திற்கு சென்று வாக்காளர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவார்கள்.வாக்காளர் பெயர், முகவரி, திருத்தம் இருந்தால், அதற்குரிய படிவம் கொடுத்து திருத்தி கொள்ளலாம். உரிய வாக்காளர்கள் நிரந்தரமாக அந்த முகவரியில் இல்லையென்றால், அதிகாரிகள் படிவம்-7 மூலம் அவர்களது பெயர்களை நீக்கிவிடுவார்கள். இதேபோன்று, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோரும் சேர்க்கப்படுவார்கள். இதில் புதிதாக சேர விண்ணப்பிக்கும் மனுக்களை பரிசீலனை செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இந்தாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வரும் அக்.15ல் வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: