சென்னை: அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழகியவர் அருண் ஜெட்லி என்று மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜெட்லி திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் “ஜெ.பி” என்று இன்றளவும் அழைக்கப்படும் ‘‘மக்கள் தலைவர்’’ ஜெயபிரகாஷ் நாராயணின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி-நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜெட்லி ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல-நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்.செய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பிறகு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையிலும் பணியாற்றி பாராட்டுக்களை பெற்றவர். அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழகிய அருண் ஜெட்லி, மாநிலங்களவையின் எதிர்கட்சி தலைவராக பணியாற்றியவர். எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சியாக இருந்த நேரங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதிலும் பெரும் பங்காற்றியவர். பாராளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர்.