×

பொருளாதார மந்த நிலைக்கு தீர்வுகாண மத்திய அரசின் சலுகைகள் நெருக்கடியை தீர்க்க உதவாது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: பொருளாதார மந்த நிலைக்கு தீர்வுகாண மத்திய அரசின் சலுகைகள் நெருக்கடியை தீர்க்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் தொழில், வர்த்தகம், வாகன உற்பத்தி, என்ஜினியரிங், துணி ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல துறைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.மோடி அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவது, மக்கள் நலத் திட்டங்கள் வெட்டிக் குறைப்பு போன்ற காரணங்களால் நாட்டில் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் தலை விரித்தாடுகிறது என்பதை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டி வந்துள்ளது. பாஜ அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதிநெருக்கடியில் இந்திய நாடு சிக்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த இலக்கு 5 டிரில்லியன் டாலர் சொல்லிக் கொண்டிருந்த மத்திய மோடி அரசு, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள தவிர்த்தாலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் சில நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கிற சூழ்நிலையில் இந்த நடவடிக்கைகள் உரிய பலனை தருமா என்பது கேள்விக்குறியே. நாடு எதிர்கொள்ளும் தொடர் அந்நியச் செலவாணி நெருக்கடியின் விளைவாக, அந்நிய நிதிமூலதனத்தை சார்ந்துள்ள மத்திய அரசு, அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்திருக்கிறது. இது எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தின் இறையாண்மையை இந்த அரசு கைவிட்டு வருகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நெருக்கடியைத் தீர்க்க உதவாது. வரும் காலங்களில் நெருக்கடி இன்னும் தீவிரமடையும்.

எனவே, மோடி அரசு விவசாயத்துறையை மீட்டெடுப்பது, பாசன மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி நீர் மேலாண்மையை மேம்படுத்துவது, முழுமையான பயிர் இன்சூரன்ஸ் திட்டங்களை நிறைவேற்றுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையையும், வருமானத்தையும் உறுதி செய்வது, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது, அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு-குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு சந்தை உத்தரவாதம், கடன் வழங்குவது, ஜி.எஸ்.டி.யிலிருந்து விதிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்திருக்கிறது. இது எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தின் இறையாண்மையை இந்த அரசு கைவிட்டு வருகிறது.

Tags : Central government's,concessions, resolve recession , not solve,crisis, K. Balakrishnan
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...