சென்னை: ஐடி நிறுவனங்களை இணைக்கும் வகையிலான புதிய கார் சேவை நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி, சென்னை மாநகர கழகத்தின் சிறிய பேருந்து சேவை மற்றும் சீருந்து இணைப்பு சேவை ஆகியவற்றை வழங்கி வருகிறது. தொடர்ந்து பயணிகளுக்கு விரைவாகவும், எளிமையாகவும் தங்களது இடங்களுக்கு செல்லும் வகையில் பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த வசதிகளை விட கூடுதலாக ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இணைக்கும் வகையில் சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டைடல் பார்க் (தரமணி) மற்றும் ராமானுஜம் தொழில்நுட்ப பூங்காவிற்கு குளிர்சாதன கார் இணைப்பு சேவையை ₹20 கட்டணத்தில் நாளை முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. ஏற்கனவே, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டி.எல்.எப் மென்பொருள் நிறுவனத்திற்கும் ₹20 கட்டணத்தில் குளிர்சாதன கார் சேவையும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.