இன்று காவலர் தேர்வு 8888 பணியிடத்துக்கு 3.22 லட்சம் பேர் போட்டி

* தமிழகம் முழுவதும் 228 மையங்களில் நடக்கிறது

* செல்போன் கொண்டு செல்ல தடை.

சென்னை: தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காவலர் தேர்வு நடக்கிறது. 8888 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வை சுமார் 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர 62 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 8888  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது.விண்ணப்பிக்க ஏப்ரல் 8ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்தனர். தேர்வுக்கு சுமார் 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மைங்களில் நடக்கிறது. எழுத்து தேர்வில் மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவில் 50 கேள்விகளும், உளவியலில் 30 கேள்விகளும் கேட்கப்படும். வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு 11.20 மணி வரை, சுமார் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெறும்.

 தேர்வு எழுதுவோர் தேர்வு மையத்திற்கு அழைப்பு கடிதம் (ஹால்டிக்கெட்), அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தேர்வு எழுதும் அட்டை, ஊதா அல்லது கருமை நிற பந்து முனை பேனா எடுத்து செல்லலாம்.

தேர்வுக்கு அறைக்கு மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்பான எந்த பொருட்களும் கொண்டு செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் எஸ்.பி.க்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திடீரென தேர்வு நடைபெறும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். எழுத்து தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் விண்ணப்பதாரர்கள் பெற வேண்டும். இந்த தேர்வுக்கான ரிசல்ட் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். அந்த முடிவுகள் 1 மாதத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடம்பாக்கத்தில் பெண்களுக்கு தனி மையம்

சென்னை அண்ணாசாலை காயிதே  மில்லத் பெண்கள் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, கோடம்பாக்கம் மீனாட்சி பெண்கள் கல்லூரி என 13 மையங்களில் காவலர் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 19,990 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் பெண்கள் 2429 பேர் அடங்குவர். கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் நடைபெறும் தேர்வில் பெண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அங்கு 2000 பெண்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Related Stories: