சென்னை: அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த ஏழை எளியோர்களுக்கான திருமண திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளியோர்களுக்கு திருமண நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் ஏழை தம்பதிகளுக்கு நான்கு கிராம் தங்க திருமாங்கல்யம் மற்றும் ₹10 ஆயிரம் செலவில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2012 ஜூன் 18ம் தேதி 1008 ஜோடிகளுக்கு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதற்காக ₹1.51 கோடி செலவிடப்பட்டது. ஆனால், இந்த திருமணம் நடந்ததில் குளறுபடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, திருமணமானவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும்கட்சியை சேர்ந்த சிலரால்தான் இப்பிரச்னை நடந்ததாக கூறப்பட்டாலும், அறநிலையத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் பணியில் சேர்ந்தனர். இதற்கிடையே, கடந்த 2012ல் நடந்த சம்பவத்தால் பயந்துபோன அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த அஞ்சியதாக கூறப்படுகிறது.