×

விமான நிலையத்தில் பரபரப்பு தங்கம், குங்குமப்பூ, ஐபோன் பறிமுதல்: 4 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மூன்று விமானங்களில் ₹52.5 லட்சம் மதிப்புடைய தங்கம், குங்குமப்பூ, ஐபோன், கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  சிங்கப்பூரில் இருந்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராவுத்தர் நயினா (25), பாக்கர் முகமது (24) ஆகிய இரண்டு பேர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று விட்டு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. தனியறைக்கு அழைத்துச்சென்று சோதித்தபோது அவர்களது உள்ளாடையில் தலா 300 கிராம் வீதம் 600 கிராம் தங்க கட்டிகள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர், இந்நிலையில் இலங்கையில் இருந்து லங்கன் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் (25) வந்தார்.

அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவரது உடமையில் எதுவும் இல்லை. தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டபோது, உள்ளாடையில் 337 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேரிடமும் இருந்து 937 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ₹36.5 லட்சம்.இதேபோல நேற்று காலை 8.30க்கு சென்னை வந்த லங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சிவகங்கையை சேர்ந்த ஜாஹீர் உசேன் (24) மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது சூட்கேஸ் மற்றும் பைகளை திறந்து பார்த்தனர். அதில் 4,75 கிலோ உயர் ரக குங்குமப்பூ, ஐபோன், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹14 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் ஜாஹீர் உசேனை கைது செய்தனர்.



Tags : Four arrested, smuggling gold, saffron, iPhone , airport
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...