சென்னை: பிராட்வே டான்பாஸ்கோ இளைஞர் மன்றத்தின் 75ம் ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு, தொடர்ந்து பல விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, திருத்தந்தை மோகன்ராஜ் நினைவு யு-14 கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது. வியாசர்பாடி டிபிஒய்சி, கீழ்ப்பாக்கம் டிபிஒய்சி, எப்சி மெட்ராஸ், அன்பு இல்லம் கிரேட் கோல்ஸ் கால்பந்து மன்றம், புனித பீட்ஸ் பள்ளி, டான் பாஸ்கோ பள்ளி என சென்னையை சேர்ந்த 16 பள்ளிகள், கால்பந்து கிளப்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் வியாசர்பாடி டிபிஒய்சி - சென்னையின் எப்சி அணிகள் மோதின.
தொழில் முறை கால்பந்து அணியான சென்னையின் எப்சி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. சிறந்த கோல்கீப்பராக கே.மோகன் (கிரேட் கோல்ஸ்), சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக ஹர்ஷ் (எப்சி மெட்ராஸ்), சிறந்த நடுகள ஆட்டக்காரராக விக்ரம் (வியாசர் பாடி டிபிஒய்சி), சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக கே.சூர்யா (சென்னையின் எப்சி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.