சென்னை: திமுக முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் விருதுகளை பெறுவோரின் பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி, பெரியார் பிறந்த தினம், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான தினம் என்பதால் அந்த நாளை திமுக, முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி இந்தாண்டு வரும் செப்டம்பர் 15ம் தேதி திருவண்ணாமலையில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் விருது பெறுவோரின் பட்டியல் திமுக தலைமை கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:2019ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் திருவண்ணாமலை நகரம், ‘கலைஞர் திடலில்’ நடைபெறும் திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது த.வேணுகோபாலுக்கும், அண்ணா விருது சி.நந்தகோபாலுக்கும், கலைஞர் விருது ஏ.கே.ஜெகதீசனுக்கும், பாவேந்தர் விருது சித்திரமுகி சத்தியவாணிமுத்துக்கும், பேராசிரியர் விருது தஞ்சை இறைவனுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.