சென்னை: சத்துணவு திட்ட ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கம் சார்பில் நேற்று வெளியிட்ட கண்டன அறிக்கை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டத்தை ஜெயலலிதா மேலும் மெருகேற்றினார்.
அதன்படி, 13 வகையான உணவு வகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேலை செய்யும் சத்துணவு ஊழியர்கள் 37 வருடங்களாக இத்திட்டத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. இதனால் வேலைப்பளு அதிகரித்துள்ளது மேலும், கடந்த ஏழு ஆண்டுகளாக உணவூட்டு செலவீனத்தொகையை உயர்த்திக்கொடுக்காமல் சத்துணவு அமைப்பாளரின் சம்பளத்தில் ஒரு பகுதியை செலவு செய்து சத்துணவு திட்டத்தை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கும் இந்த சூழலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சத்துணவு திட்டத்தையும், அதில் பணிபுரியும் ஊழியர்களையும் விமர்சனம் செய்து பேசி இருப்பதை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.