×

தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை... மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

அவனியாபுரம்: தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து 5 தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து ஒரு தீவிரவாதி தமிழகத்தில் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை நேற்றுமுன் தினம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் இரவு பகலாக ரோந்து கப்பலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் குந்துகால், மண்டபம், தொண்டி கடலோர பகுதியில் சந்தேகப்படும் வகையில் தென்படும் நபர்கள் குறித்து, உடனடியாக அருகே உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என் மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையம், ராமநாதசுவாமி கோயில், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதியில் வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலையம் முழுவதும் ரோந்து வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீவிர சோதனைகளுக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள், விமான நிலைய வெளிவளாகம், சோதனை சாவடி என பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 31ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு விமான நிலையத்தில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைப்போல் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பழநி பாலதண்டாயுதபாணி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Terrorists, Madurai
× RELATED சர்வதேச அளவில் தீவிரவாதத்துக்கு...