×

600 பெண்களிடம் கைவரிசை... இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை காட்டி மிரட்டி பணம் பறிப்பு... சென்னை ஆசாமி கைது

திருமலை: ஓட்டல் ரிஷப்சனிஸ்ட் பணி ஆசை காட்டி கவர்ச்சி புகைப்படம் பெற்று இளம்பெண்களிடம் பணம் பறித்த சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் பேங்க் காலனியை சேர்ந்தவர் ராஜ்செழியன் என்கிற பிரதீப்(33), தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியர். இவர், ‘பிரதீப் க்யூக்கர்.காம்’ என்ற வெப்சைட் மூலமாக பெண்களின் செல்போன் எண்களை பெற்றுள்ளார். அந்த எண்களில், பிரபல நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பாளர்களுக்கான வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி வாட்ஸ்ஆப் மூலம் பதிவிட்டு அந்த பெண்களுக்கு அனுப்பியுள்ளார். இதனைக்கண்டு நாடு முழுவதும் 16 மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட பெண்கள், பிரதீப்பை தொடர்புகொண்டு விவரம் கேட்டுள்ளனர்.

அப்போது, தன்னை அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெயரில் மனித வள மேலாளராக அறிமுகப்படுத்தி ‘சாட்’ செய்ய தொடங்கிய பிரதீப், வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பில் வரும் பெண்களிடம் பயோடேட்டா மற்றும் புகைப்படங்களை கேட்டுவந்தார். அதன்பேரில் ஏராளமான பெண்கள் பயோடேட்டா அனுப்பி வந்துள்ளனர். அடுத்த சில நாட்களில், அந்த எண்ணிற்கு சாட் செய்யும் பிரதீப், ‘நீங்கள் முதற்கட்ட தேர்வில் தகுதி பெற்றுவிட்டீர்கள். ஓட்டலில் வரவேற்பாளர் பணி என்பதால் உடல் கட்டமைப்பு முக்கியம். எனவே முன்னழகு, பின்னழகு புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள். அதைவைத்து தான் நான் தேர்வு செய்து உங்களுக்கு பரிந்துரை செய்யமுடியும் என தெரிவித்துள்ளார். பெண் ஒருவர் தானே கேட்கிறார் என நம்பி, ஏராளமான பெண்கள் தங்களது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் திருமணமான பெண்களும் அடங்குவர்.

அந்த புகைப்படங்கள் வந்தவுடன் உடனடியாக அவர்களை, ‘வீடியோ கால்’ மூலம் தொடர்பு கொள்ளும் பிரதீப், ‘உடனே எனக்கு பணம் அனுப்பி வை அல்லது எனது ஆசைக்கு இணங்கவேண்டும். இல்லாவிட்டால் உனது கவர்ச்சி படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். அதனை நம்பிய பல பெண்கள் செய்வதறியாது பணம் கொடுத்து வந்துள்ளனர். மேலும் சில பெண்கள் வேறுவழியின்றி அவர் கூறிய இடத்திற்கு வந்து தனிமையில் இருந்துள்ளனர். இதேபோல் மொத்தம் 16 மாநிலங்களில் 600க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. பல பெண்களை அவர் பலாத்காரம் செய்துள்ளதும் தெரியவந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் மியாப்பூர் போலீசில் சில தினங்களுக்கு முன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னையில் பதுங்கியிருந்த பிரதீப்பை நேற்று கைது செய்தனர். மேலும் பிரதீப்பிடம் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பறிமுதல் செய்தனர். கைதான பிரதீப்புக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர். பெரும்பாலும் இரவுப்பணிக்கு சென்றுவந்த பிரதீப், வீட்டில் பகலில் சாவகாசமாக அமர்ந்து பெண்களை மயக்கி ஏமாற்றி வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Money, extortion, arrest
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...