×

உ.பி மாணவர்களுக்கு சத்துணவு இதுதான்... உப்பை தொட்டு ரொட்டி சாப்பிடு... வீடியோ வெளியானதால் ஆசிரியர் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் ரொட்டியுடன் உப்பு விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தின்கீழ், பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஹினாடா கிராமத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவாக ரொட்டியும், உப்பும் விநியோகிக்கப்பட்டதாக வீடியோ வெளியானது.

பொதுவாக, மதிய உணவில் பட்டியலில், ரொட்டியுடன் சேர்த்து பால் மற்றும் பழங்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அத்தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவாக ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அனுராக் பட்டேல் உத்தரவிட்டார். மேலும், மதிய உணவுத் திட்ட பொறுப்பாளரான பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, ஆட்சியர் அனுராக் பட்டேல் கூறுகையில், ‘‘ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளரின் அலட்சியத்தால், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளோம்; இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வெறும் சப்பாத்திகள் கொடுத்துள்ளனர். காய்கறிகள் இல்லாததால் அவற்றை உப்புடன் சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். இது ஒரு கடுமையான குறைபாடு” என்றார்.

Tags : Teacher, suspended
× RELATED ஜன.29ம் தேதி முதல் பிப். 6 வரை நடத்த...