×

வேலூர் மேல்மொணவூர் பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பணி தொடங்கியது

*சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து வழங்க நடவடிக்கை


வேலூர் : வேலூர் மேல்மொணவூர் பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பணி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து மணல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலாற்றில் இயங்கி வந்த அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. இதனால் மாவட்டம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப்பணிகள் முடங்கியது.
இதற்கிடையில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் மேல்மொணவூர் பகுதியில் மாட்டு வண்டிகளிலும் விரிஞ்சிபுரம் அருகே லாரிகளில் மணல் அள்ள அனுமதி வேண்டி மாவட்ட நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் விண்ணப்பித்தது. மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல்மொணவூர் பாலாற்றில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக அதிகாலை 3 மணியளவில் 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பாலாற்றில் குவிந்தனர். பின்னர் ஒவ்வொரு மாட்டு வண்டிக்கும் பில் போட்டு மணல் அள்ள அனுமதி அளித்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலூர் மேல்மொணவூர் அருகே பாலாற்றில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரி நேற்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
ஒரு மாட்டு வண்டிக்கு கால் யூனிட் மணல் மட்டுமே நிரப்ப முடியும். ஒரு மாட்டு வண்டிக்கு கட்டணமாக ₹100ம், ஜிஎஸ்டி வரி ₹5 என சேர்த்து மொத்தம் ₹105 வசூலிக்கப்படுகிறது. இந்த குவாரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். ஒரு ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 500 கன மீட்டர் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விடுவார்கள் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில்  மணல் அள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இன்று முதல் நாள் என்பதால் மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 நாட்களுக்கு பிறகுதான் மீண்டும் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும். வேலூர், திருமணி, காட்பாடியை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு நாள் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும்.

இதேபோல் தொடர்ந்து சுழற்சி முறையில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும். இந்த மாட்டு வண்டி மணல் அள்ளுவதற்கான கட்டணம் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும்  பணத்தை கையில் வாங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு ஒரு மாட்டு வண்டிக்கு ஒரு முறை மட்டுமே பில் போடப்படும். முறைகேடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மணல் அள்ள மீண்டும் திடீர் தடை

வேலூர் மாவட்டத்தில் ஓராண்டுக்கு பிறகு மாவட்ட சுற்றுச்சுழல் அனுமதியுடன் மேல்மொணவூர் அருகே மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடந்த 16ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி மேற்கொண்டதை தொடர்ந்து நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. முதல்நாளில் 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டது.  இதற்கிடையில் மீண்டும் மணல் அள்ள தடை விதித்து நேற்று சப்-கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மணல் அள்ள பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மாட்டு வண்டிக்கும் தனியாக ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாட்டு வண்டியை வைத்து வெவ்வேறு எண்கள் வாங்கி கொண்டு மணல் அள்ள அதிகளவில் விண்ணப்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அனைத்து மாட்டு வண்டிகளை மணல் குவாரிக்கு அழைத்து ஆய்வு செய்ய சப்-கலெக்டர் முடிவு செய்துள்ளார். அதுவரை மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகே மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : sand,Bullock cart ,Vellore
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...