விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த மேட்டமலையில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு குடோன் ஒன்று அரசு உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது. வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட பட்டாசுகளை காரில் இருந்து உரிமையாளர் ரமேஷ் உட்பட 5 பேர் இறக்கி குடோனில் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது பட்டாசுகள் இடையே உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் குடோனில் இருந்த உரிமையாளர் ரமேஷ் மற்றும் தர்மா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.