ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தின் சொத்து விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்

புதுடெல்லி: கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இந்த நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில், சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் கார்த்திக் சிதம்பரம் நடத்திவரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை பெற சிபிஐ முயற்சித்து வருகிறது. அதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், லண்டன்,ஸ்விட்சர்லாந்து,பெர்முடா ஆகிய 5 நாட்டு அதிகாரிகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. அந்த விவரங்கள் கிடைத்தால் அவை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முக்கிய ஆதாரமாக திகழும் என்று சிபிஐ கருதுகிறது. சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் காவலில் விசாரிக்க கீழ் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

அதில், ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யாமல் கீழ் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ -க்கு கீழ் நீதிமன்றம் நேற்று மாலை அனுமதி வழங்கியது. இதையடுத்து ப. சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ -க்கு வழங்கப்பட்ட அனுமதி வரும் 26ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதுதவிர, மற்றொரு வழக்கான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்த முன்ஜாமின் மீது வரும் செப்டம்பர் 3ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்திய நிறுவனமான ஏர்செல்லில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக சிபிஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைதிருக்கும் நிலையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்ஜாமின் மீதான மனு விசாரணை செப்டம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: