மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் 16 வது நாளாக தடை நீடித்தது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மதியம் முதல் 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 116.65 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 116.95 அடியாக உயர்ந்தது. மதியம் 117.02 அடியானது. மாலை 4மணியளவில் 117.10 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 88.91டிஎம்சி. நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் ஒருசில நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.