ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் கோதண்டராமர் சுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கோயிலை அடைத்து விட்டு குருக்கள் ராமேஸ்வரம் திரும்பினர். நேற்று காலை திறக்க சென்றபோது, கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சுவாமி சன்னதியின் கதவு, கோயில் பிரகாரத்தின் இரண்டு பக்கக்கதவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், மெயின் கதவுக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் இருந்த உண்டியல் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. கோயிலின் முன்பு உள்ள 2 பெட்டிக்கடைகளிலும் பூட்டை உடைத்து பணம் ஏதாவது இருக்குமா என்று பார்த்துவிட்டு, எதுவும் கிடைக்காததால் கூல்டிரிங்ஸ் குடித்து விட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். தகவலறிந்து தனுஷ்கோடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதனால், கோயிலுக்குள் நேற்று பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.